Friday, 12 August 2011

அதிகாரம் 2: வான் சிறப்பு

1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


வான்நின்று - வானத்திலிருந்து (வரும் மழையைக் குறிக்கும்)

உரிய காலத்தில் மழை பெய்வதால்தான் உலகம் சிறப்பாக இயங்கி வருகிறது; அதனால் மழையை அமுதம் என்று கூறலாம்.

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

துப்பார்க்கு - உண்பவர்க்கு (சாப்பிடுபவர்க்கு) - அதாவது உண்ணும் உயிரினங்களுக்கு
துப்பாய - உண்ணக்கூடிய (சாப்பிடக்கூடிய)
துப்பாக்கி - உணவாக்கி (சாப்பாடாக்கி) - உணவை விளைவைத்து 

உண்பவர்க்கு (உயிர்களுக்கு) சாப்பிடுவதற்கு உகந்த உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பதும் மழையாகும்.

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.

விண்இன்று - ஆகாயத்தில் இருந்து (வரும் மழை)
பொய்ப்பின் - பொய்க்குமானால் (பெய்யாது விட்டால்)
உடற்றும் - வருத்தும்.
விரிநீர்  - பரந்த நீர் (கடல்)

 உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால்,  (பரந்த - நீர் நிறைந்த)  கடலால் சூழப்பட்ட உலகமாயினும், பசி தோன்றி இந்த உலகத்தினுள்ளே நின்று வருத்தும்.


5. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.

  ஏரின் - ஏரிலிருந்து
  உழாஅர் - உழமாட்டார்
  உழவர் - கமக்காரர்
  புயல் என்னும் - மழை என்னும் 
  வாரி - வருவாய்
  வளங்குன்றி - வளம் குன்றி
  கால் - விட்டால்


  மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( பயிர் விழைவிக்கும்) கமக்காரர் ஏர் மூலம் உழ மாட்டார்கள்.



5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 


கெடுப்பதூஉம் - கெடுப்பதுவும் (பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும்)


பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும் மழையே; அதேபோல் (ஒழுங்காக பெய்து) கெட்டவர்களுக்குத் துணையாக அமைந்து அவர்களை வாழ வைப்பதுவும் மழையே.

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

விசும்பு - மேகம்
விசும்பின் - மேகத்திலிருந்து
துளி - மழைத்துளி
வீழின் அல்லால் -  விழுந்தாலன்றி (விழாவிட்டால்)
காண்பு அரிது - காண்பது அரிது (காணமுடியாது)


வானத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால், உலகத்தில் பசுமையான புல்லின் தலையைக் கூட காண முடியாது.


7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
   தான்நல்கா தாகி விடின்.


தடிந்தெழிலி - அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு
தான்நல்காது ஆகி விடின் - தான் கொடுக்காது விட்டால் (அதாவது கடல் தனது நீரைக் கொடுக்காது விட்டால்)

 தன்நீர்மை - வளம்.

மழை பெய்வதற்காக, மேகமானது கடல் நீரை அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு, கடலானது நீரை வழங்காது விட்டால், அந்த நெடுங்கடலும் கூட வளம் குன்றிப் போகும்.

( மறை பொருள் - கற்றோர் தாம் கற்ற கல்வியை சமுக முன்னேற்றத்துக்கு உபயோகிக்காவிட்டால் அது கற்றவர்களுடைய புகழையும் மங்கவைக்கும்.)


8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வானோர்க்கும் - தேவர்களுக்கும்
சிறப்பொடு - சிறப்பாக
பூசனை - பூசைகள்
செல்லாது - நடக்காது
வானம் வறக்குமேல் - வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்)


வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்) தேவர்களுக்கும் கூட சிறப்பாக பூசைகள் நடக்காது. 


( மறை பொருள் - மழை பெய்யாவிட்டால் உலகில் எதுவுமே சிறப்பாக நடைபெறாது)


9தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

தானம் - தருமம்
தங்கா - நிலைக்காது 
வியன் உலகம் - விரிந்த இவ்வுலகம்
வானம் 
வழங்கா தெனின் - மேகம் கொடுக்காவிட்டால் (அதாவது மழை பெய்யாவிட்டால்)

மழை பெய்யாவிட்டால், பிறருக்காக வழங்கும் தருமமோ அல்லது தனக்காகச் செய்யும் தவமோ இந்த விரிந்த உலகத்தில் இல்லாது போய்விடும்.

10. நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.



நீர் இன்று - நீர் இல்லாமல்
வான்இன்று - மேகம் இல்லாமல்
ஒழுக்கு - மழை

நீர் இல்லாமல் இந்த உலகம் இயங்காது அதேபோல மேகம் வழங்காமல் மழை கிடைக்காது.


                         வான் சிறப்பு முற்றும்
                               
                               மீண்டும் முகப்புக்கு

Wednesday, 3 August 2011

அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் "அ" (அகரம்) முதலெழுத்து போல இந்த உலகுக்கு இறைவனே முதன்மையானவன்.


2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


இறைவனுடைய திருவடிகளை வணங்காமல் இருப்பாராயின் அவர் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன (ஒன்றுமில்லை).


3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மலர்களிலே வீற்றிருக்கின்ற அந்த இறைவனுடைய திருப்பாதங்களை அடைந்தவர்கள் (அதாவது முத்தி அடைந்தவர்கள்) தேவலோகத்தில் எப்போதும் வாழ்வார்கள்.


4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லாத அந்த இறைவனுடைய திருப்பாதங்களை அடைந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் என்பதே இல்லை.


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இறைவனுடைய கருத்தாழம் மிக்க புகழை விரும்பி நினைப்பவர்களை -  குழப்பத்தை உருவாக்கும் நல்வினை மற்றும் தீவினை ஆகிய இரு வினைகளும் அணுக மாட்டாது.


6.  பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


(கண் காது மூக்கு நாக்கு தோல் என்கின்ற) ஐம்புல ஆசைகளையும் அடக்கிய இறைவனுடைய பொய் இல்லாத சிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ்வார்கள்.

7.  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


எவரையும் தன்னுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ள அந்த இறைவனது திருவடிகளை நினைப்பவர்களுக்கு மட்டுமே மனக் கவலைகளைப் போக்க முடியும். மற்றவர்க்கு (அவ்வாறு இறைவனது திருவடிகளை நினையாதவர்களுக்குமனக்கவலையைப் போக்க முடியாது.


8. அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அறக்கடலாக (தருமப் பிரபுவாக) விளங்கும் அந்த இறைவனது திருவடிகளை  டைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்கின்ற பெரும் கடலை நீந்துவது சுகமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. அவ்வாறு இறைவனது திருவடிகளை  அடையாதவர்களுக்கு  மறுபிறப்பு என்கின்ற பெரும் கடலை
நீந்துவது கடினமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பர்.


9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


எட்டு குணங்களையும் உடைய அந்த இறைவனது திருவடிகளை வணங்காத தலைகள், கேட்காத செவி (பார்வையில்லாத கண்) முதலியன போன்று பயனற்றவையாகும்.


10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவனது திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்கின்ற பெரும் கடலைக் கடப்பர். அதாவது இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் பிறவி என்கின்ற பெரும் கடலை கடக்க மாட்டார்கள். அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்களுக்கு மறுபிறப்பு என்பது மீண்டும் மீண்டும் வரும். 


கடவுள் வாழ்த்து முற்றும்

மீண்டும் முகப்புக்கு